எழுத்து ஒளி கதைசொல்லல்: ஒளிப்பதிவாளர் செழியன் நேர்காணல்

Jun 25 2016

Views: 3160

யக்குனர் பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான செழியன், தமிழில் நல்ல சினிமாவுக்காக தொடர்ந்து எழுதியும் பங்காற்றியும் வருபவர். இவரது உலக சினிமா நூல் புகழ்பெற்றது. புதிய இயக்குனர்கள், புதிய  கதைக் களங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் இவர் இயக்குனர் ராஜூ முருகனின் ஜோக்கர் படத்தில் பணியாற்றியுள்ளார்.

ஒளிப்பதிவாளரான நீங்கள், சிறுகதை எழுத்தாளர், ஓவியர், புகைப்படக் கலைஞர், மேற்கத்திய இசையைக் கற்றறிந்தவர்… சினிமாவைக் கையாள்வதற்கும் இத்திறன்களுக்கும் என்ன தொடர்பு?

சினிமா மீதான ஈர்ப்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சின்ன வயதிலிருந்து அந்த ஆர்வம் இருந்துவந்திருக்கிறது. அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவனாகவே இருந்தேன். பாடப்புத்தகங்களைப் படிப்பது மட்டுமே போதாது என்பதை அம்மாவும், அப்பாவும் சொல்லியபடி இருந்தார்கள். இப்படித்தான் இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. நான் வசித்த சிவகங்கையில் அன்னம் பதிப்பகம் இருந்தது. சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், விக்ரமாதித்யன், சுஜாதா, கி.ராஜநாராயணன் எனப் பெரிய எழுத்தாளர்கள் வந்துபோகும் இடம் அது. ஒருகட்டத்தில் சிவில் இன்ஜினீயரிங்கில் ஆர்வம் குறைந்து இலக்கிய ஆர்வம் முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது. அப்போதுதான் வீடியோ ஒளிப்பதிவுக் கருவி அறிமுகமாகியிருந்தது. குறும்படம் என்பது தமிழில் அறிமுகமாகாத நாட்களில் நான் நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்திருக்கிறேன். நாடகம் நடத்தி இருக்கிறேன்.கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியிருக்கிறேன். தீவிரமாகக் கவிதை எழுதி இருக்கிறேன். அப்பா, டிராயிங் மாஸ்டர். தேர்தல் காலங்களில் எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் படங்களை அவர் வீட்டிலேயே வரைவார். அந்தப் பாதிப்பில் விளம்பரங்களையும் பெரிய பெரிய சுவர் ஓவியங்களையும் உருவப்படங்களையும் வரைந்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது இலக்கியம், ஓவியம், கவிதை நிழற்படம் என்று சினிமாவை நோக்கித்தான் நான் தொடர்ந்து தயாராகி இருக்கிறேன்.

சினிமாவின் நேரடிப் பரிச்சயம் எப்போது?

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு எண்ணத்துடன் சென்னைக்கு வந்துபோய்க்கொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் ருத்ரய்யாவின் மருமகன் குமார் எனக்கு நண்பராக அறிமுகமானார். அவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிறுவனத்தில் பணியாற்றினார். எய்ட்ஸ் நோய் தொடர்பான பிரசாரங்கள் தொடங்கிய 90-களின் காலகட்டம் அது. எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு படமொன்றுக்குத் திரைக்கதை எழுதச் சொன்னார்.  அப்போது அன்னம் நூலகத்தில் இருந்து கதிர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் நூலை எனக்குக் கொடுத்தான். அப்போதுதான் பேல பெலாசின் சினிமா கோட்பாடு நூல் தமிழில் வந்திருந்தது. அந்தப் புத்தகங்களை எல்லாம் படித்த பாதிப்பில்தான் எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்துக்கான திரைக்கதையை முப்பது பக்கத்தில் எழுதினேன். அதை இயக்குநர் ருத்ரய்யாவும் படித்திருந்தார். நான் சென்னை வந்தபோது அவரைச் சந்தித்தேன். சினிமா என்ற ஊடகத்தை நான் புரிந்துகொண்டிருந்த விதம் மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக அவர் சொன்னார். நான் படித்த புத்தகங்கள் பற்றிக் கேட்டார். தொடர்ந்து இலக்கியம் வாசியுங்கள், அதுதான் சினிமாவுக்கு முக்கியமானது என்றார். சினிமாவில் என்னவாக விருப்பமென்று கேட்டார். நான் இயக்குநராக வேண்டுமென்று சொன்னேன். சினிமாவைப் பொருத்தவரை, ஒளிப்பதிவுதான் பிரதானமான மொழி, அதைக் கற்றுக்கொண்டால்தான் சினிமாவை முழுமையாகக் கையாள முடியும் என்று சொன்னார்.

ருத்ரய்யா சொன்னதன் அடிப்படையில் ஊருக்குத் திரும்பப்போய்க் கறுப்பு-வெள்ளைப் புகைப்படக் கலையைத் தீவிரமாகக் கற்கத் தொடங்கினேன். இந்தக் காலகட்டத்தில் எனது சிறுகதைகள் கணையாழியில் பிரசுரமாயின. எனது சிறுகதைக்கு ‘கதா’ விருது கிடைத்தது. கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய அனைத்து செயல்பாடுகளும் சினிமாவை அணுகுவதற்கான பயிற்சிகளே. கதைகளை காட்சிகளாகவே எழுத முயன்றேன். காட்சிதான் என்னுடைய சவால். இப்போதும் ஒரு திரைக்கதை எப்படிக் காட்சிகளாக மாறப்போகிறது என்பதில்தான் எனது கவனம் இருக்கும்.

மேற்கத்திய இசையை ஏன் கற்றுக்கொண்டீர்கள்?

இசை ஆர்வமும் பெற்றோரிடமிருந்துதான் தொடங்கியது. அம்மா, அப்பா இருவருமே நல்ல பாடகர்கள். அப்பா இசைக்குழுவில் பாடியிருக்கிறார். அம்மா தனிமையில் சன்னமாகப் பாடுவார். சின்னவயதில் அப்பாவின் மேல் கால்போட்டுத் தூங்கும் இரவுகளில், வெட்டுப்புலி தீப்பெட்டியை வைத்துத் தாளம்போட்டுக்கொண்டே எம்ஜிஆர், நாகூர் ஹனீபா பாடல்களைப் பாடுவார். பள்ளி விடுதியில் மின்சாரமில்லா இரவுகளில் நான் பாடகராக மாறுவேன். ஆனால் இசையைக் கற்றுக்கொள்ள நினைத்ததில்லை. ஒரு திருமண வீடியோவை எடிட் செய்வதற்காக மதுரைக்குப் போயிருந்தபோது, பக்கத்தில் ஆர்மோனியச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அடுத்த அறையிலேயே ஆசிரியர் நூர்பாட்ஷா உட்கார்ந்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். மதுரைக்கு வந்து இரண்டு மூன்று மணிநேரங்கள் காத்திருக்கும் நேரத்தில் இவரிடம் பயிற்சியெடுக்கலாமே என்று நினைத்து, அவரிடம் கற்றுத் தர்றீங்களா என்று கேட்டேன். அவர் என்னிடம், ஆர்மோனியம் இருக்குதா? என்று கேட்டார். வேலையின்றி சுற்றுகிறேன். ஆகவே அதற்கான வசதி இல்லையென்றேன். “வித்தையக் கத்துக்கற ஆசையக் கொடுத்த கடவுள் கருவியை ஒளிக்கமாட்டான்” என்று அசரீரி போல் அவர் சொன்னார். எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லை. நான் அவரிடம் மியூசிக் டியூசன் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். ஒரு மாதத்துக்குப் பின்னர் பேராசிரியர் ஷாஜஹான் கனி என்னை வீட்டுக்குக் கூட்டிப்போய் ஆர்மோனியம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். ஆசிரியர் சொன்னது அப்படியே நடந்தது. எனக்குப் பெரிய ஆச்சரியம். அந்தச் சம்பவம்தான் கதா பரிசு வாங்கிய ‘ஆர்மோனியம்’ கதையானது.

இசைப் பயிற்சி என்னைப் பெரிதாக இழுத்துப் போய்விட்டது. எனக்கு இசையில் இருந்த ஆர்வத்திலும் அவர் என் மீது காட்டிய ஆர்வத்திலும் மூன்று வருடம் அந்த வகுப்புகள் தொடர்ந்தன. வாரம் இரண்டுநாட்கள் சிவகங்கையிலிருந்து பேருந்தில் மதுரைக்குப் போய்ப் படித்தேன்.  ஒருநாள் கூட நான் வகுப்புக்குப் போகாமல் இருந்ததேயில்லை. ‘மாணவன் தயாராக இருக்கும்போது ஆசிரியர் உன்முன் தோன்றுவார்’ என்பது இதுதான் என்று நினைக்கிறேன். அவர் தனக்குத் தெரிந்ததை முழுமையாகக் கற்றுக்கொடுத்தார்.

பி.சி.ஸ்ரீராமிடம் எப்படி உதவியாளராகச் சேர்ந்தீர்கள்?

நான் எடுத்த புகைப்படங்களையெல்லாம் ஒரு ஆல்பமாகப் போட்டு நண்பர்களிடம் காட்டினேன். இயக்குநர் சீமான் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நண்பர்களீடம் எல்லாம் சொன்னார்.  அவர்கள், எல்லாம் பிரமாதம், பி.சி.ஸ்ரீராமிடம் போய்ச் சேருங்கள் என்றார்கள். அவர் பெரிய ஆள். அவரை எப்படிக் கவர்வது என்று யோசித்தேன். பாரதியாரின் ‘பெரிதினும் பெரிது கேள்’. கவிதை வரிதான் ஞாபகம் வந்தது. அதை மட்டும் ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பினேன். அதைப் போல சிறிய அளவில் ஆறு கடிதங்கள். தினம் ஒரு கடிதம். ஆறாவது நாளின் கடிதத்தில் எனது பெயரை எழுதினேன். ஏழாவது நாள் நேரடியாக அவர் வீட்டுக்குப் போய் நின்றேன். அம்மாதான் முதலில் என்னைப் பார்த்தார்கள். அடுத்து வந்த ஸ்ரீராம் சார் என்னைப் பார்த்தவுடன் வாங்க செழியன் என்று அழைத்தார்.  எனது ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்து அதை என் கையில் கொடுத்துவிட்டு, சினிமாட்டோகிராபிக்கு இதெல்லாம் யூஸே இல்லை… கொஞ்சம் காத்திருங்க என்று சொல்லிட்டுப் போய்விட்டார்.  அதன் பின்னர் நான் ஒரு 20 தடவைகள் போய்ப் பார்த்திருப்பேன். ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போய் காலை எட்டுமணியில் இருந்து காத்திருக்கிறேன். மதியம் 12 ஆனது. ஒரு மணி ஆனது. நான் காத்திருந்தேன். இன்றுதான் கடைசி என்று நினைத்தேன். சில நிமிடங்களில் அவரது கார் வீட்டுக்குள் வந்தது. என்னைப் பார்த்தவுடன், இனிமேல் உங்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது, வாங்க, இன்றிலிருந்து நீங்க என் அஸிஸ்டண்ட் என்று சொல்லி காரில் ஏற்றிக் கூட்டிப்போனார். இதற்கு ஒன்றரை வருடங்கள் ஆனது. ஜேஎஸ் அலுவலகம் அழைத்துப் போனார்..’ முதல்ல உங்களுக்கு சினிமா கிடையாது. அட்வர்டைஸிங்தான்..’ விளம்பரப்படங்களில் வேலை செய்வதைப் பார்த்தபிறகு முடிவுசெய்வேன் என்றார்.

அந்த இடம் வேறொரு உலகம். யாரும் தமிழில் பேச மாட்டார்கள். ஸ்ரீராம் சாரின் தனியறையில் திரைக்கதை நூல்கள், ஒளிப்பதிவு குறித்த உலகின் சிறந்த நூல்கள் இருந்தன.. வேலை நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் அந்தப் புத்தகங்களைப் படிப்பேன். மதியச் சாப்பாட்டுக்கு மட்டும் வெளியே வருவேன். இப்படியே ஆறுமாதங்கள் ஆயின. பின்னர் தான் சினிமா படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.

 

பி.சி.ஸ்ரீராமிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

முதலில் தைரியமும் நம்பிக்கையும். பிறகு ஒழுங்கும், அர்ப்பணிப்பும், நேர்த்தியும்… பிறகுதான் சினிமாவும் ஒளிப்பதிவும். ‘இது கருவிகள் சார்ந்த தொழில்நுட்பம். கருவிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒருபோதும் அஞ்சாதே. இது ஒரு விஞ்ஞானம். தினமும் மாறிக்கொண்டே இருக்கும். பின்தங்கிவிடாதே. கற்றுக்கொண்டே இரு.’ இதுதான் அடிப்படை. எனக்கு முதல்நாள் படப்பிடிப்பு. உணவு இடைவேளையில் என்னை அழைத்து அடுத்து எடுக்கப்போகிற ஷாட்டைச்சொல்லி கேமரா வைங்க வச்சிட்டு என்னையக் கூப்பிடுங்க என்று சொன்னார். அவர் விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றுதான் நினைத்தேன். ஆனால் போங்க என்று அழுத்தமாகச் சொல்லவும் போனேன். ஏற்கனவே போட்டோகிராபியில் பயிற்சி இருந்ததால் அந்தச் சிறிய அறையில் கேமரா வைத்தால் அவர் சொன்ன வைட் காட்சியை எடுக்க முடியாது என்று புரிந்தது. அந்த அறையில் பூட்டிய ஒரு கதவு இருந்தது. அதைத் திறந்து கேமராவை உள்ளே வைத்ததும் சரியாக இருந்தது. வந்து சொன்னேன். முதுகில் செல்லமாக ஒரு தட்டு. அவ்வளவுதான். அடுத்து அவர் சொன்னமாதிரி ஒரு காட்சியும் எடுக்கப்படவில்லை. எனக்கு அது ஒரு பரிட்சை. அதன் மூலம் ஒரு பூட்டிய கதவைத் திறக்க வைத்ததுதான் அவர் செய்தது. இது ஒரு சிறிய உதாரணம். இதைத்தான் கற்றுத்தந்தார் என்று சொல்லி முடிக்க முடியாது. அவருடன் இருந்த நாட்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதை நூலாக எழுதும் திட்டம் இருக்கிறது.

கல்லூரி, பரதேசி, தாரை தப்பட்டை போன்ற பெரிய படங்களில் வேலை செய்தும் தொடர்ந்து பெரிய நட்சத்திரங்கள் இல்லாத புதிய இயக்குநர்களின் சிறுபடங்களிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவது ஏன்?

பெரிய படம் சிறிய படம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. பிடித்த படங்களில் பணிபுரிகிறேன். கல்லூரி எடுக்கும்போது தமன்னா புதுமுகம். தென்மேற்கு பருவக்காற்று எடுக்கும்போது விஜய் சேதுபதி புதுமுகம்..பெரிது சிறிது என்பது நம் ஈகோவிற்குதான். உண்மையில் அப்படி ஒன்றுமில்லை என்று நான் நம்புகிறேன்.  ஒளிப்பதிவில் அழகு என்பது ஆன்ம அழகுதான். கதை சொல்கிற உணர்வும் உயிர்ப்புதான் முக்கியம். எனவே உயிர்ப்பான படங்களே எனக்குப் பிடிக்கிறது. இந்த மாதிரிப் படங்கள்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறையும் எனக்கு இல்லை. பிடிக்க வேண்டும். அது வேலையாக மட்டும் இல்லாமல் மனம் லயித்துச்செய்கிற ஒன்றாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு, சினிமாட்டோகிராபருக்கான சவால்கள் என்ன?

பிலிம் இருந்தபோது அதில் எப்படிப் பதிவாகிறது என்பதைப் பார்ப்பதில் ஒரு த்ரில் இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு அந்த சிலிர்ப்புணர்வை இழந்துவிட்டோம். ஆனால் ஒரு காட்சியை உயிர்ப்புடன் எடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது, அது பிலிமாக இருந்தாலும் டிஜிட்டலாக இருந்தாலும் அதன் பின்னால் இருக்கிற கலைஞனின் அழகுணர்வு என்பது இன்னமும் இருக்கவே செய்கிறது. பழையதுதான் சிறந்தது என்று புதியதை ஒதுக்குவதும் தேவையில்லை. தொழில்நுட்பம் தான் மாறியிருக்கிறதே தவிர, காமிராவுக்குப் பின்னால் இருக்கிற நபரின் நோக்கமோ, வேலையோ மாறியதாக நான் நினைக்கவில்லை.

ஒளிக்கும் காட்சிக்குமான தொடர்பு என்ன?

ஒரு காட்சியைப் பார்த்தவுடன் அது சோகமானதா, சந்தோஷமானதா என்பதை அதன் ஒளியே சொல்ல முடியும், சொல்ல வேண்டும். ஒரு ப்ரேமில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்குள் இருப்பது இணக்கமா, முரண்பாடா என்பதை ஒளியே சொல்லிவிட முடியும். ஒளியைப் புரிந்துகொள்வதற்கும், ஒளியைக் கையாள்வதற்கும், ஒளி உருவங்களோடு எப்படி விளையாடி உணர்வுகளை உருவாக்குகிறது என்பதையும் ஒளிப்பதிவாளன் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறான். மொத்தத்தில் ஒளியை நான் புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனது திரைப்படங்கள்.

ஒளியினுடனான தொடர்ந்த தேடலில் அதன் மொழி இப்போது எனக்குப் புரிகிறது. அதன் தன்மையும் விளையாட்டும் புரிகிறது. சினிமா போன்ற கூட்டுக்கலை வடிவத்தில் சரியான ஒளிக்காகக் காத்திருப்பதும் பதிவுசெய்வதும் எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை. என்றாலும் சில சமயங்களில் ஒளி நம்மிடம் கைகுலுக்கும் அனுபவம் நிகழ்கிறது.

ஒரு ஓவியன் கித்தானில் தீற்றிக்கொண்டே இருக்கிறான். எந்தக் கணத்தில் அவன் ப்ரஷ்சை தூர எடுக்கிறான்? எப்போது எது அவனைப் போதும் என்று நிறுத்தச் சொல்கிறது. அதுபோலத்தான் ஒரு ப்ரேமில் ஒளி, உருவம் வெளி என்று எல்லாம் சேர்ந்து உருவாகும்போது ஒருகட்டத்தில் போதும் நிறுத்து என்று அதுவே சொல்லும். படப்பிடிப்பின் சத்தங்களுக்கு நடுவில் அதைக் கேட்பதற்கான அமைதி நம்மிடம் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக அடிப்படையாக என்னென்ன திறன்கள் தேவை?

ஒளியைப் படிப்பதுதான் ஒளிப்பதிவாளரின் அடிப்படை. அதைக் கற்றுக்கொள்ள ஓவியங்களைப் பார்க்க வேண்டும். சிறந்த புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டும். சினிமா ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, அசைவுகள் மிகவும் முக்கியம். ஒரு உருவம் நகரும்போது எப்படி அதற்கு ஒளியூட்டப் போகிறோம் என்பதைத் திரைப்படங்களைப் பார்ப்பது வழியாகவே கற்க முடியும். நிஜ வாழ்க்கையிலும் கற்கலாம். இது எல்லாம் தொழில்நுட்பம். இதைத்தாண்டி சுற்றியுள்ள வாழ்க்கையை அவதானிக்க வேண்டும். கதைகள், கவிதைகளைப் படிக்க வேண்டும். தொழில்நுட்பமும், சுயமான கற்பனையும் தான் செய்கிற வேலையில் முழுமையான அர்ப்பணிப்புணர்வும் சேரும்போதுதான் தனித்துவமான ஒளிப்பதிவாளன் உருவாகமுடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்திய அளவில் ஒளிப்பதிவு சார்ந்து சாதனையாளர்கள் என்று யாரையெல்லாம் கருதுகிறீர்கள்?

வி.கே.மூர்த்தி, சுபர்த்தோ மித்ரா, வின்சென்ட் மாஸ்டர், அசோக் குமார், பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன் உடனே நினைவுக்கு வரும் பெயர்கள். இன்னும் வங்காளம், கேரளம், தற்போதைய இந்தி சினிமாவில்  சொல்வதற்கு இன்னும் சில பெயர்கள் இருக்கின்றன.

படம் இயக்குவதில் ஆர்வம் இருக்கிறதா?

ஒரு மொழி எப்படிக் காட்சியாக மாறும் என்பதைத் தெரிந்துகொள்வதற் கான பயிற்சியாகத்தான்  நான் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதிப் பார்த்தேன். இன்றுவரை அதன்வழியே நான் ஒளிப்பதிவைக் கற்றுக்கொண்டு வருகிறேன். என்னிடமும் சொல்வதற்கு சில கதைகள் இருக்கின்றன. அதை எனக்குப் பிடித்த விதத்தில் சொல்ல வேண்டும். சொல்லுவேன். படங்களை இயக்கினாலும் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்வேன். ஏனெனில் ஒளிப்பதிவின் வழியேதான் சினிமாவின் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என்று  நான் நம்புகிறேன்.

நீங்கள் ஒளிப்பதிவு செய்து வெளியாகப் போகிற ஜோக்கர் படம் பற்றிச் சொல்லுங்கள்?

ஜோக்கர் சுவாரசியமான கதை. அரசியல் பகடிதான் அதன் மையம். வலிமையான உரையாடல்களும் உண்டு. ஒரு அழகான காதல் கதையும் இருக்கிறது. ஒளிப்பதிவாளராக இருந்தாலும் ஒரு படத்தை எடுக்கும்போதே சில காட்சிகள் நமக்குப் பிடிக்கும். சில காட்சிகள் நம்மைக் கலங்கவைக்கும். அப்படி ஜோக்கரில் எனக்குப் பிடித்த நிறைய இடங்கள் இருக்கின்றன. படம் வந்த பிறகு அதைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது.

எழுத்து ஒளி கதைசொல்லல்
ஒளிப்பதிவாளர் செழியன் நேர்காணல்
சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்
நன்றி: தமிழ் இந்து.

x
^