1950-களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் திரு. வின்செண்டின் சாதனைகள் உச்சத்துக்குச் சென்றது. திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் அவர் இணைந்து, சுமை தாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படைப்புக்களுக்கு ஒளிப்பதிவாளராக செயலாற்றினார். அதோடு மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையிலும் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் ஜெயன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட். இருவருமே ஒளிப்பதிவாளர்கள்தாம்!
திரை மற்றும் நாடக எழுத்தாளரும், நகைச்சுவையில் புகழ்பெற்றவருமான திரு. சித்ராலயா கோபு ஒரு சந்தர்ப்பத்தில், வின்செண்ட் அவர்களைப் பற்றிய நினைவுகளை கீழ்க்கண்டவாறு பகிர்ந்துகொண்டார்..
“வின்செண்டுக்கு எப்போதும் தொழில்நுட்ப விவரங்களின் மேல் ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது. இதனால்தான் அவர் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக மிளிர முடிந்தது. வின்செண்டின் பெயரை ஸ்ரீதரிடம் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு, அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய படைப்புகள் இருந்தன. சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த, உத்தமபுத்திரன் எனும் கருப்பு வெள்ளைப் படத்தில் பணியாற்றியபோது வின்சென்டின் தொழில்நுட்ப சாதனைகள் என்னை பிரமிக்க வைத்தது. மீண்ட சொர்க்கம் படப்பிடிப்பில், நடிகை பத்மினியின் பரபரப்பான நடனத்தை பல கோணங்களில் கேமராவை வைத்து, மிக திறமையாக படம் பிடித்தார். அதுவொரு மறக்க இயலாத காட்சியாக அமைந்தது. கருப்பு-வெள்ளை நாட்களில், அரங்கத்தின் பின்னணி நிறம், ஒளிப்பதிவாளர்களை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கும், அதன் சவால்களையெல்லாம் திறம்பட சமாளித்தவர் திரு.வின்செண்ட். ஸ்ரீதருடன் அவர் இணைந்து வேலை பார்த்த முதல் படம் கல்யாண பரிசு, ஒரு வெற்றிப்படமாக பல நாட்கள் ஓடியது. அவரது அடுத்த படம், மீண்ட சொர்க்கம் அந்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் தொழில்நுட்பக் கூறுகள், சினிமாத்துறையில் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றன. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் உள்ள ‘சொன்னது நீதானா..’ பாடல் படமாக்கப்பட்ட விதம் வின்சென்டின் திறமைகளுக்கான ஒரு சான்று..”
– கட்டுரையாளர்: B. கோலப்பன்