சினிமா என்பது அறிவியல் முன்னேற்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன கலை வடிவம். சினிமா வளர்ச்சியின் பாதை என்றும் பெரும் சவால்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.
சினிமாவின் தோற்றத்தை பின்னோக்கிப்பார்த்தால் அரிஸ்டாட்டிலின் ’ஒளிபுகும்’ தத்துவமே இதன் ஆரம்ப கட்டம் எனலாம். 1620 ல் ராபர்ட் பாய்லி உருவாக்கிய காமிரா அப்ஸ்குராவிலிருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அடிப்படை புகைப்பட பதிவை டாக்ரே மற்றும் வில்லியம் ஃபாக்ஸ் தால்போட் 1839 ம் ஆண்டு உலகிற்கு அறிவித்தனர்.
பிறகு மை பிரிட்ஜ், எடிசன், லூமியர் சகோதரர்கள், ஜார்ஜ் ஈஸ்ட்மேன், இடெயின் மாரே ஆகியோரின் முயற்சியால் “சினிமா” பிறந்தது.
எட்வின். எஸ். போர்ட்டர், க்ரிஃபித், புடாவ்கின், சார்லி சாப்ளின், சேர்கி ஈஸ்சென்ஸ்டெயின் ஆகிய சிறந்த படைப்பாளிகள் மூலம் சினிமா தனித்தன்மை பெற்று “சினிமா மொழி” என்று ஒன்று தனியாக உருவானது.
சினிமா மெளனப்படங்களாக இருந்த 1927 ல் “ஜாஸ் சிங்கர்” என்ற திரைப்படத்திலிருந்து பேசும் படமாக மாறியது.
திரைப்பட கலை படைப்புகளுக்கு விருது வழங்கும் முறையான “ஆஸ்கர் விருது” 1929 ம் ஆண்டு முதன்முதலாக ஹாலிவுட் ரோஸ்வேலட் ஹோட்டலில் வழங்கப்பட்டது.
கடந்த 88 ஆண்டுகளாக சினிமாவின் பல பிரிவுகளில் “ஆஸ்கர் விருது” அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க திரைப்படங்களுக்கும் மற்றும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் விருதுகளை அளித்து கெளரவித்து வருகிறது.
சினிமா என்ற இந்த உன்னத கலை வடிவத்தை வளர்த்ததில் பெரும் பங்கு திரைப்பட விழாக்களையே சாரும்.
திரைப்பட விழாக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட நகரத்திலோ அல்லது ஒரு பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒன்றிலோ அல்லது பல திரையரங்குகளிலோ சில குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து பல உலக திரைப்படங்களை திரையிடும் முறையாகும்.
இது திரைப்பட தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், திரைப்பட ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவரும் சங்கமிக்கும் ஓர் உன்னத இடமுமாகும்.
இங்கே பல மொழிகள், பல நாடுகளிலிருந்து பல புதிய சிந்தனைகளும் புதிய தொழில்நுட்பங்களுடன் திரைப்படங்களாக திரையிடப்படுவது மட்டுமல்லாமல் திரைப்படம் முடிந்த பிறகு அத்திரைப்படத்தின் இயக்குநரோடு விவாதமும் செய்யலாம் என்பது சிறப்பம்சம்.
திரைப்பட விழாக்களிலேயே மிக பழமையானது “வெனிஸ்” திரைப்பட விழாவாகும். இத்திரைப்பட விழா 1932 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு “கான்” திரைப்பட விழா 1946 ம் ஆண்டிலும் பெர்லின் திரைப்பட விழா 1951 ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. இவை மூன்றும் மிகவும் பிரசித்தி பெற்ற உலகத் திரைப்பட விழாக்களாகும். ஆங்கிலத்தில் இத்திரைப்படவிழாக்களை “பிக் த்ரீ” என்பார்கள்.
போலந்து இயக்குநர் கிரிஸ்டேஸ் கிவ்லோஸ்கி தனது மூன்று திரைப்படங்களான ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய படைப்புகளை ஒயிட் – “பெர்லின் திரைப்படவிழாவுக்காகவும்”, ப்ளூ – “வெனிஸ் திரைப்படவிழாவுக்காகவும்”, ரெட் – “கான் திரைப்படவிழாவுக்காகவும்”, என்று இத்திரைப்பட விழாக்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கினார்.
சான் பிரான்சிஸ்கோ உலகத் திரைப்பட விழாவானது அகிரா குரசவா மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்படங்களை அமெரிக்க மக்களிடையே பிரபலபடுத்திய பெருமையை பெற்றது.
சந்தோஷ் சிவன் இயக்கிய “டெரரிஸ்ட்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தற்கு மிக முக்கிய காரணம் “கெய்ரோ” உலகத்திரைப்பட விழாவாகும்.
மாற்று முயற்சிகளுக்கென்றே (experimental films) பிரத்தியேகமாக செயல்படும் “அன் அர்பார்” திரைப்பட விழா 1962 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.