‘சொசைட்டீஸ் ஆக்ட்’டின் கீழ், தென்னிந்திய சினிமா துறையில் முதல் முறையாக, ‘சினி டெக்னிஷியன்ஸ் அசோசியேஷன் ஆஃப் சௌத் இந்தியா’ என்ற பெயரால், காலஞ்சென்ற திரு.ராம்நாத் அவர்கள் ஒரு அமைப்பைத் துவக்கி வைத்தார். ஆரம்ப காலத்தில், கலை மற்றும் பண்பாட்டு அடையாளமாகவும், கூட்டுறவாக இயங்குவதற்காகவுமே இந்த அமைப்பு செயல்பட்டது. பிறகு 1956ல்தான், ‘சினி டெக்னிஷியன்ஸ் கில்ட் ஆஃப் சௌத் இந்தியா’ என்ற பெயரால் முதல் யூனியன் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சினிமாத் துறையின், அத்தனை உட்பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ்வைத்து, பொதுவானதாக செயல்பட்டது. இதைத் துவக்கி வைத்தவர் திரு. நிமாய் கோஷ் அவர்கள். அவர் பெங்காலிலிருந்து வந்து, சென்னையில் குடியேறி, கடைசி மூச்சு வரை இங்கேயே பணியாற்றியவர்.
14 ஆண்டுகாலமாக CTG படிப்படியாக வளர்ந்தது. அதன்பின் சினிமாவின் ஒவ்வொரு உட்பிரிவுகளுக்கும், தனித்தனியான சங்கங்களை அமைக்க வேண்டிய தேவை உருவானது. அதன் அடிப்படையில், 28-11-1972ல், சௌத் இண்டியன் சினிமாட்டோகிராபர் அசோசியேஷன் (SICA) என்ற பெயரில் 17 பேர் கொண்ட குழுவால், டிரேட் யூனியன் ஆக்ட் 1926ன் கீழ் ஒளிப்பதிவாளர்களுக்கான சங்கம் துவக்கப்பட்டது. இதன் முதல் நிர்வாகக் குழுவாக திரு. A.வின்சென்ட் – நிறுவிய தலைவர், திரு. P.N சுந்தரம், பொதுச்செயலாளர் மற்றும் திரு. S மாருதி ராவ் பொருளாளர் ஆகியோர் பதவியேற்றனர். இது எண்: 3, துரைசாமி ரோடு, சென்னை-34, என்ற முகவரியில், திரு P.N சுந்தரம் அவர்களின் இல்லத்திலிருந்து செயல்பட்டது. அவர் மிகவும் பெரிய அளவில் தொழில் செய்துகொண்டிருந்த போதும், சங்கத்துக்காகவும் அயராது உழைத்தவர்.
ஜாதி, மதம், மொழி அல்லது மாநிலம் என்கின்ற பேதம் எதுவுமின்றி, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் என நான்கு மாநில உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். வேலை முடிந்த பிறகு, பொறுப்பாளர்கள் இரவில் சந்தித்து சங்கத்தின் மேம்பாட்டைப் பற்றி கலந்து பேசுவார்கள். அங்கத்தினர்களிடையே ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து, தயாரிப்பாளர்களிடமிருந்து தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வசதிகளைப் பெற்றுத் தர திட்டங்களைத் தீட்டுவார்கள். மாத ஊதியமாக இருந்தாலும், ஒப்பந்தப் பணி முறையில் இருந்தாலும் அவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலனையும், வசதிகளையும் வாங்கித் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் SICA அசோசியேஷன் எடுத்து வந்தது.
ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. காரணம் ஸ்டுடியோக்களிலும், வெளிப்புற யூனிட்களிலும் வேலை பார்க்கும் ஒளிப்பதிவாளர்கள், மற்றும் உதவியாளர்கள் முழுமையாக தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தனர். மேலும் திரைப்படக் கல்லூரிகளிலிருந்து புதிதாக மாணவர்கள் வெளியேறி ஒளிப்பதிவுத் துறையில், நூற்றுக்கணக்கில் இணைந்து கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில்தான், திரைப்பட உலகில் அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செயல்பட FEFSI எனும் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. Film Employees Federation of Southern India என்கின்ற அமைப்பு பதிவு செய்யப்பட்டவுடன் முதலாளிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து, சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. சில தோல்விகளுக்கு மத்தியிலும், உறுப்பினர்களுக்கு நியாயத்தையும் சலுகைகளையும் பெற்று தரும் முயற்சியைத் தொடர்ந்தது. சங்க நடவடிக்கைகளையும் சீர்படுத்தி வந்தது.
தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களைத் தீட்டி செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்காக, வாரத்தின் இரண்டாம் ஞாயிறு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அங்கத்தினர்களுக்காக விதிமுறைகளை வரையறுத்து, மீறுபவர்களைத் தண்டித்து சரியானக் கட்டுப்பாட்டை நிலைநாட்டி வந்தது. ஒரு தொழிலாளருக்கு ஊதியம் பாக்கி இருக்கும் போது, வேறு யாரும் அவர் வேலையை ஏற்றுக்கொண்டு முடித்துத் தர அனுமதி கிடையாது. அதே போல், தொழிலாளர்களும் தங்கள் உறுதிமொழிக்கேற்ப நடந்து கொள்ளத் தவறினால், தயாரிப்பாளர்களுக்கு முன்பணத்தைத் திருப்பித்தர கட்டளையிட்டது.
1972ல், அலுவலகம் 57, ஆற்காடு சாலை எனும் முகவரிக்கு மாற்றப்பட்டது. அதே முகவரியில் FEFSI, SICA, தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட கலை இயக்குனர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கம் போன்றனவும் ஒருங்கே செயல்பட்டு வந்தன. மற்றவர்களின் அல்லது அரசியல் கட்சிகளின் எந்தவித தலையீடு எதுவுமின்றி, இந்த அனைத்து சங்கங்களும் சுதந்திரமாக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டன. அந்தக் காலத்தில் உறுப்பினர்கள் தங்கள் வேலை அல்லது ஒப்பந்தம் எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்பு உணர்ச்சி இருந்து வந்தது.
1973 ஆம் ஆண்டு தென், மேற்கு மற்றும் கிழக்கு மண்டல மாநாடு சென்னையில் நடைபெற்றது. மூன்று மண்டலங்களிலிருந்தும் உறுப்பினர்கள் வந்து, கலந்துரையாடி, விவாதித்து, பல முடிவுகளை எடுத்தார்கள். அதன் விளைவுதான் இந்திய திரைப்படத்துறையின் ஏகப் பிரதிநிதியாக அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
பல்லாண்டு காலமாக முதலாளிகளின் கைகளில் அவதிப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை சீர்படுவதற்காக பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஸ்டூடியோக்களிலும், லேப்களிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு குறிப்பிடப்பட்ட வேலை நேரம், அதிக நேரத்துக்கான முறையான ஊதியம், விடுமுறை நாட்களில் வேலை பார்ப்பதற்கு கூடுதல் ஊதியம் மற்றும் மாற்று விடுமுறை, தொழிலாளர் சட்டத்தின்படி ஊக்கத்தொகை போன்ற பல சலுகைகள் பெறப்பட்டன. வேலையிலிருந்து தன்னிச்சையான நீக்கம் நிறுத்தப்பட்டது. காலப்போக்கில் சங்கத்தின் பொருளாதார நிலையும் முன்னேறி வந்ததால் அங்கத்தினருக்கு கடன் வசதி, மருத்துவ உதவி, வயோதிக மானியம், இறுதி மரியாதைச் செலவு போன்ற பல வசதிகள் செய்து தரப்பட்டன.