ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அதிலுள்ள அற்புதமான காட்சிகள்! திரைக்கு பின்னால் இருந்து கொண்டு இதற்காக உழைக்கும் ஒளிப்பதிவாளர்கள், பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலே போய்விடுகின்றனர். தொழில்நுட்பம் அதிகம் வளராத துவக்கத்தில், பழமையான இயந்திரங்களை வைத்துக் கொண்டு, தங்கள் திட சிந்தனையை மட்டுமே உபயோகித்து, படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துத் தந்தவர்கள் இவர்கள்தான். எந்தவித பயிற்சியுமின்றி தங்கள் சொந்த முயற்சியாலேயே இவர்கள் தொழிலைக் கற்றுக் கொண்டு சேவை செய்தவர்கள். தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவர்களைத்தான் பெரிதும் நம்பியிருந்தார்கள்.
1/50 விநாடிகளில் படச்சுருளை எக்ஸ்போஷர் செய்வதற்கு மிகவும் கூர்மையான கவனம் தேவை. படச்சுருளின் விலையும் மிக அதிகம். அப்படியெல்லாம் உழைத்துவிட்டு படம் எப்படி வருமோ என்று கவலையுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்கள் இரவு பகலாக வேலை பார்க்க வேண்டும். திடீரென்று கிளம்பி பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டும். நேரத்தோடு உணவு, உறக்கம் என்கிற ஒழுங்கு இருக்காது, கிடைக்காது. இதனால் அவர்களின் உடல் நலமும், ஆயுட்காலமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், இத்தனை சீரிய உழைப்பை அவர்கள் நல்கிய போது, வயோதிக காலத்தில் அவர்கள் ஏழ்மையிலும் தனிமையிலும் அவதிப்பட நேர்ந்தது. 1990க்குப் பின் இவர்களுக்காக ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று சங்கத்தில்
தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒளிப்பதிவாளர்களும், அவர்களது உதவியாளர்களும் நலம் பெற வேண்டும் என்பதற்காக 1993ம் ஆண்டு CAM அறக்கட்டளை துவக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பைனான்சியர்கள் போன்றவர்களின் உதவியுடன் அவர்களுக்காக நிதி திரட்டப்பட்டது. இசை நிகழ்ச்சி, நட்சத்திர இரவு போன்றவைகளை நடத்தி அறக்கட்டளைக்கு பணம் சேர்க்கப்பட்டது. மருத்துவச் செலவு, மற்றும் மருந்துக்காக பண உதவி கொடுக்கப் படுகிறது. பிள்ளைகளின் கல்விக்காக உதவித் தொகை வழங்கப்படுகிறது.
2002ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி சினிமாக்களில், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமின்றி, நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவையை பெருமைப்படுத்துவதற்காக “SICA AWARDS FOR THE YEAR 2002” என்ற பெயரில், ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த நடுநிலையாளர்களை நியமித்து, சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.